மண்ணின் தன்மை, தட்பவெப்பநிலை, நோய் தீவிரம் மற்றும் சாகுபடி செய்யப்படும் ரகத்தைப்பொறுத்து வாழை மரங்களில் உண்டாகும் பனாமா அல்லது பூஸாரியா வாடல் நோயால் 40 முதல் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும். பனாமா வாடல் நோய் 4 மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய கன்றுகளை தாக்குகிறது. மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்தாலும் பூஞ்சாண தாக்குதல் ஏற்படும். வேர்களைத் தாக்கும் போது கிழங்கின் உட் திசுக்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. அடுத்ததாக தண்டுப்பகுதியை தாக்கும் போது நோய் தாக்குதலின் அறிகுறி தென்படும்.
உண்ணக்கூடிய தண்டு பகுதியை வெட்டி பார்த்தால் வெளிர் பழுப்பு முதல் வெளிர் சிவப்பு நிற மாற்றத்தை காணலாம். ஆரம்ப நிலையில் இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் வெளிர் பச்சை முதல் பழுப்பு நிற கோடுகள் காணப்படும். இதனால் ஊட்டச்சத்துக்கள் செடிகளின் மேல் பகுதிகளுக்கு செல்வதில்லை. நிறமாற்றம் அடைந்த அடி இலைகள் பழுப்பு நிறமாகி தண்டுப்பகுதியில் இருந்து இலைகள் பிரியும் இடத்தில் ஒடிந்து தொங்கும்.
