
கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதையடுத்து அதிமுக அமைப்புச்செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார். செங்கோட்டையனிடம் வசம் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியை ஏ.கே.செல்வராஜுக்கு வழங்கியிருந்தார் இபிஎஸ்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இன்று புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அப்போது செங்கோட்டையன் ஆதரவாளர் என்று கருதப்பட்ட பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரியும் தனது ஆதரவாளர்களுடன் ஏகே செல்வராஜை சந்தித்து வாழ்த்து கூறி சால்வை அணிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ணாரி, ‘‘ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் அத்தனை நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுச்செயலாளர் இபிஎஸ் பின்னால் உறுதியாக நிற்கிறோம். செங்கோட்டையன் கட்சிப் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோபி, பவானிசாகர், அந்தியூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக கூறப்படுவது உண்மையில்லை. இயக்கம் தான் பெரிது தனி நபர் அல்ல. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பக்கம் துணை நிற்போம். அவரது தலைமையை வலுப்படுத்துவோம். ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் அத்தனை நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுச்செயலாளர் இபிஎஸ் பின்னால் உறுதியாக நிற்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார். ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்களும் இபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்து ஏ.கே.செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.