குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி வேடமணிந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடித்து கொண்டனர். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு,பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் பக்தர்கள் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர். இதேபோல் ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கைகளை வசூலித்தனர்.
12 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்க
அருள்பாலித்தார். 10-ம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது. சிங்க முகம், எருமை தலை,
சேவலாக உருமாறி வந்த சூரனை அம்மன் வதம் செய்தார்.
