தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6 கோடியே 36 லட்சம்.
ஒருவருக்கு இரண்டு எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுத்தால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பம் பிரிண்ட் செய்தாகி விட்டதா? இந்த பணியில் எத்தனை ஊழியர் பயன்படுத்தப்படுகிறார்கள்? ஒருவர் ஒரு நாளில் எத்தனை வாக்காளர்களை தொடர்பு கொள்வார்கள்? சனி, ஞாயிறு வேலை செய்வார்களா? குறைந்தது இருமுறை ஒரு வாக்காளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் கொடுக்க, திரும்ப வாங்க எத்தனை நாள் ஆகும்? எழுதப்படிக்காதவர்கள் 50 லட்சம் பேர் இருந்தால் அவர்களின் விண்ணப்பங்களை எப்படி, யாரை வைத்து நிரப்புவீர்கள்? வாக்காளரின் அனைத்து விவரங்களும் ஆதார் அட்டையில் உள்ளபோது அதை ஏன் வாக்காளர் அட்டையுடன் இணைக்கவில்லை? ஒன்றிய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் மக்களின் சேவைக்கு ஏன் இத்தனை கேள்விகள்? காஸ் இல்லாத வீடுகளே கிடையாது என்று சொல்லும் மத்திய அரசு காஸூடன் ஆதார் இணைப்புக்கு பதில் வாக்காளர் அட்டை எண்ணை வாங்கி இருக்கலாமே? கடந்த தேர்தலில் வாக்களித்தவர் பட்டியல் உங்களிடம் இருக்கும்போது புது வாக்காளர்களையும், கடந்த முறை வாக்களிக்க முடியாதவர்களின் காரணத்துடன் அவர்களை இணைத்தாலே உங்களின் வேலை பாதியாக குறைந்தது விடுமே.
இறந்தவர் பற்றி ஆதார் கார்டு விவரங்களுடன் மரண சான்றிதழ் கொடுக்கப்படும்போது, அதை நேரடியாக கணினி மூலமாக அவர்கள் பெயர்களை வாக்களர் பட்டியல் இருந்து நீக்கிவிடலாமே… வல்லரசாகிக்கொண்டுவரும் நம் இந்தியாவில் இல்லாத சூப்பர் கம்ப்யூட்டர் அறிவா? நீங்கள் ஆதரிக்கும் ZOHO ஸ்ரீதர் வேம்பு அவர்களிடம் கொடுத்தால் அவர் சிறப்பாக செய்து கொடுத்துவிடுவாரே, ஏன் தரவில்லை? டிஜிட்டல் இந்தியா என்று முழங்கிய நீங்கள், உங்களின் அனைத்து வித அடையாள அட்டைகளிலும் BAR CODE, QR code போடும் நீங்கள் ஏன் இப்போது மட்டும் பேப்பர், பேனாவுடன் அலைகிறீர்கள்? சாமானியனான என் கேள்விகளுக்கு உங்களிடம் (தேர்தல் ஆணையம்) உள் நோக்கமிற்றி நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
