தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்களே இருக்கும் நிலையில், முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ உள்ளிட்ட வாகன பரப்புரைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே பரப்புரை செய்துள்ள தவெக தலைவர் விஜய், 3 நாட்கள் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.
நேரக்கட்டுப்பாடு என்ற பெயரில் காவல்துறையை வைத்து திமுக தரும் மறைமுகக் கெடுபிடியால்தான், தங்களது தலைவரால் பரப்புரை செய்ய முடியவில்லை என்று தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பிபிசியிடம் தெரிவித்தார்.
காவல்துறையின் தலைவரையே தேர்தல் ஆணையம் மாற்றிவிட்ட நிலையில், இதில் ஆளும்கட்சி தலையிட வாய்ப்பில்லை என்றும், பரப்புரை ரத்து என்ற முடிவை விஜய் எடுப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம் என்றும் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்தார்.
விஜய்க்கு கூட்டம் அதிகம் வருவதால் குறுகிய காலத்துக்குள் அதிகமான காவல்துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்துவது கஷ்டம் என்பதால்தான் காவல்துறை இந்த கட்டுப்பாட்டை விதிப்பதாக முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி கூறினார்.
இதனால் இரு வாரங்களில் விஜய் பரப்புரை எப்படி நடக்குமென்பது கேள்விக்குறியாகியுள்ளது.
